சென்னையில் கொடிகட்டி பறக்கும் ஹவாலா பிஸ்னஸ்.. ரூ.3.37 கோடி பணம் சிக்கியது எப்படி?

author img

By

Published : May 27, 2023, 8:22 PM IST

சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட அமெரிக்க டாலர்

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.3.37 கோடி வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை: சென்னையில் இருந்து விமானத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர், சவுதி அரேபியா ரியால் கரன்சி ஆகிய வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடை மற்றும் சூட்கேஸ்களுக்குள் ரகசிய அறை வைத்து கடத்திய கடத்தல் ஆசாமியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இது கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்று தெரிய வந்துள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை விசாரித்த போது, அவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்வதற்காக வந்திருந்தார் என்று தெரியவந்தது. ஆனால் விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அந்தப் பயணியின் பயணத்தை சுங்க அதிகாரிகள் ரத்து செய்தனர். இதைத்தொடர்ந்து, அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, அந்தப் பயணியின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக, அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு அந்தப் பயணியின் சூட்கேஸை திறந்து பார்த்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சூட்கேஸ்-க்குள் 9 ரகசிய அறைகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகள், அவைகளை உடைத்துப் பார்த்தபோது, அவைகளுக்குள்ளும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மற்றும் சவுதி அரேபியா ரியால் கரன்சி பெருமளவு இருந்தன. இதைத்தொடர்ந்து அந்தப் பயணிடம் இருந்து மொத்தம் ரூ.3.37 கோடி மதிப்புடைய அமெரிக்க டாலர் மற்றும் சவுதி அரேபியா ரியால் ஆகிய வெளிநாட்டு பணத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அந்த நபரை விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் வேறு யாரோ? கொடுத்து அனுப்பிய பணத்தை இவ்வாறு கூலிக்காக மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில், இது கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், வேறு ஒருவர் ஹவாலா பணத்தை இவரிடம் கொடுத்து சிங்கப்பூருக்கு கடத்துகிறார் என்பது தெரியவந்துள்ளது.

எனவே இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணத்தை அவரிடம் கொடுத்துவிட்ட மர்ம ஆசாமி யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான ஹவாலா பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆருத்ரா, ஹிஜாவு நிதி மோசடி: 'குற்றவாளிகளை நெருங்குவதில் சில சிரமம் உள்ளது' - ஐஜி கூறிய காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.