ETV Bharat / state

'9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் சிறப்பு திட்டங்களை பட்டியலிடுக' - அமித்ஷாவிற்கு சவால் விட்ட ஸ்டாலின்!

author img

By

Published : Jun 10, 2023, 10:15 PM IST

Updated : Jun 10, 2023, 10:24 PM IST

mk stalin speech in salem dmk caders meeting
மூன்று நாள் நிகழ்ச்சிக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சேலத்திற்கு சென்று நிர்வாகிகள் கூட்டத்தில் பங்குபெற்றார்.

சேலத்தில் தொடர்ந்து நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சிக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு சென்று நிர்வாகிகள் கூட்டத்தில் பங்குபெற்றார்.

சேலம்: வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின், சேலம் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார். சேலத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள அரசு மற்றும் பல்வேறு தனியார் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு சென்றார்.

விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக சேலம் வந்த மு.க.ஸ்டாலின் ஐந்து ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுகவின் உள்கட்சி நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தெம்போடு ஒரு இறுமாப்போடு நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய சூழலில் முதல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமாக சேலம் மாவட்ட கூட்டம் அமைந்திருக்கிறது.

நாளை நமதே, நாற்பதும் நமதே என்பதை உரக்க சொல்ல சேலம் பயணம்: தொண்டனுக்கு தொண்டனாக இருந்து களத்தில் முதல் போர் வீரனாக இருந்து, மறைந்த வீரபாண்டியார் இருந்த சேலம் மாவட்டத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட அண்ணாத்துரை தீர்மானம் தான் சேலத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கியது. சமூக சீர்திருத்த எண்ணங்களை செயல்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. கனல் மிகுந்த வசனங்களை கலைஞர் எழுதியுள்ளார். எனவே என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஊராக சேலம் எப்பொழுதும் இருக்கிறது.

1997-ம் ஆண்டு சேலத்தில் திமுக மாநாடு நடந்தது. ஊர்வலத்திற்கு தலைமை தாங்கும் மிகப்பெரிய பெருமையை வீரபாண்டியார் எனக்கு கொடுத்தார். மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி விடிய விடிய நடந்தது. அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி இன்றளவிலும் பெருமைப்படுகிறேன். மூன்று நாள் நடந்த மாநாட்டில் ஒரு நாள் முழுவதும் இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. 2004-ம் ஆண்டு மாநாட்டில் கட்சிக் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நினைவலைகளில் நீந்தி உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஊர்கள் தோறும் திமுக என்ற தலைப்பில் கட்சி கொடிக்கம்பங்களை புதுப்பித்தல், கழகமே குடும்பம் என்ற தலைப்பில் கட்சி நிர்வாகி குடும்பங்களுக்கு உதவிட வேண்டும். என்றென்றும் கலைஞர் என்ற பெயரில் கலைஞரின் சிறப்புகளை எடுத்துரைக்கும்படி பட்டிமன்றம் நடத்த வேண்டும். எங்கெங்கும் கலைஞர் என்ற பெயரில் வாய்ப்புள்ள இடங்களில் சிலை அமைப்பது, கலைஞர் பெயரில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய படிப்பு மையம் அமைப்பது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது தான் நாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. அதிலும் நிச்சயம் சேலத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் முதன்மைச் செயலாளர் நேருவை இங்கு அனுப்பியுள்ளேன். அவர் தேர்தலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர். உங்களை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கிடைத்து விட்டது. நாளை நமதே, நாற்பதும் நமதே என்பதை உரக்க சொல்ல சேலம் வந்துள்ளேன்.

10 ஆண்டு காலம் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவை அகற்றி விட்டு மக்கள் நம்மிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் திமுக கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிப் பணிகள் மந்தமாகும் சூழ்நிலை திமுகவில் இல்லை. ஒவ்வொருவரும் உறக்கமின்றி பாடுபட்டு வருகின்றனர். அந்த உழைப்பின் பலனாக இதுவரை கட்சியில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பேச உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கட்டமைப்பு கொண்ட கட்சி உலகத்திலேயே எங்கும் இல்லை. திமுகவை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற சூழ்நிலையை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கி கொண்டிருக்கிறேன். உங்கள் உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும். கட்சி வளர்ச்சி, ஆட்சி பொறுப்பில் இருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தானே என அலட்சியமாக இருக்க கூடாது. பாஜக செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதற்காக அவர்கள் எதை வேண்டுமானால் செய்வார்கள். கர்நாடக நிலை தொடர்ந்தால் முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என கட்சியின் நிலை குறித்தும் கலைஞர் நூற்றாண்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆவேசமாகப் பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சருக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்: தொடர்ந்து பேசிய அவர், “அமித்ஷா சென்னை வருவது பரபரப்பு செய்திகளாக வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தெரிகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அமித்ஷா தயாராக இருக்கிறாரா. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவடைய திமுக தான் காரணம். மத்திய அரசின் நிதியில் 11 சதவீத நிதியை, தமிழகத்திற்கு கொண்டு வந்த பெருமை திமுகவுக்குத்தான் உள்ளது. தமிழை செம்மொழியாக்கியதில் தொடங்கி, 56 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒரகடத்தில் 496 கோடி மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. 1553 கோடி மதிப்பில் சேலம் உருட்டாலை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டது. தாம்பரத்தில் தேசிய சித்த ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, 1550 கோடி மதிப்பில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேது சமுத்திர திட்டம், சென்வாட் வரி நீக்கம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பொடா சட்டம் ரத்து, மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை அகல ரயில்பாதைகளாக மாற்றியது, ரயில்வே மேம்பாலங்கள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், கடல் சார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் , உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா என எண்ணற்ற பணிகளை செய்துள்ளோம். இதுபோன்ற ஒரு பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட தயாரா, அந்த தைரியம் ஆற்றல் அவருக்கு வருமா?

பாஜக அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து ஸ்டாலின் கருத்து: 2015ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரைக்கும் மருத்துவமனை கட்டப்படவில்லை. அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மனமில்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு அமித்ஷா பதில் சொல்ல வேண்டும். பாஜக தமிழகத்திற்கு கொடுத்தது நீட், தமிழ் புறக்கணிப்பு, குடியுரிமை சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் உரிமை பறிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு தான் பாஜக அரசு கொடுத்தது.

கொத்தடிமைக் கூட்டமான அதிமுகவை நம்பி பாஜக வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி. தோல்வி மேல் தோல்வி அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் வெள்ளத்தில் அதிமுக பாஜக இருவரும் அடித்து செல்லப்படுவது உறுதி.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்: திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடைந்து வருகின்றனர். மகளிர் இலவச பேருந்து திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும். திமுக ஆட்சியின் சாதனைகளை நிர்வாகிகள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

திமுகவின் அடுத்த டார்கெட்: சமூக வலைத்தளங்கள் மூலமே மக்கள் செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். எனவே திமுக நிர்வாகிகள் சமூக வலைத் தளங்களில் கணக்கை தொடங்க வேண்டும். செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்முகாமில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகளை முடக்க வேண்டும். தாய் கழகத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு துணை அமைப்புகளில் வாய்ப்பு வழங்கிட வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமே பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு கணிசமாக பொறுப்புகளை வழங்க வேண்டும்.

திமுகவினரை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். திமுக தொண்டர்களை கவனித்து குறையை தீர்த்து வைக்க வேண்டும். குறையை தீர்க்க முடியாவிட்டாலும் காது கொடுத்தாவது கேட்க வேண்டும். நம்முடைய குடும்பம் போல கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையானதை செய்யவேண்டும்.

தேசிய அளவில் திராவிட மாடல் ஒங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. தெற்கில் இருந்து ஒலிக்கும் குரலை வடக்கே இருப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யார் வந்தாலும் நாங்கள் பயப்பட போவதில்லை. உறுதியோடு இருந்து களப்பணியாற்றிட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” பாஜகவை வன்மையாக சாடி திட்டங்கள் குறித்து விவரித்து விளக்கினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம் ஆர் கே, பன்னீர்செல்வம் மற்றும் சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்சுக்கு நேரம் ஒதுக்குவாரா மத்திய அமைச்சர் அமித்ஷா?

Last Updated :Jun 10, 2023, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.