ETV Bharat / health

வளரிளம் பெண்கள் கர்ப்பமடைவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? மருத்துவரின் முக்கிய அறிவுறுத்தல்கள்! - Teenage Pregnancy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 9:21 PM IST

Teenage Pregnancy: 18 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைந்தால் குழந்தை பெறும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவர்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

கோப்புப்படம்,  எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி
கோப்புப்படம், எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி (photo credits - ETV Bharat Tamil Nadu)

எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 18 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள் கர்ப்பமடைவதால் பிரசவத்தின் போது குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பது, அதிக ரத்தப்போக்கு, நஞ்சுக்கொடி வெளியே வர முடியாதது, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் ஏற்படும் எனவும், வளர் இளம் பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போது மனதளவிலும் வளர்ச்சி அடையாமல் இருப்பதால், குழந்தைகளைப் பராமரிப்பது சிரமமாக இருக்கும் எனவும் எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாதந்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் அடைகின்றனர் என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியானது. அதற்கு குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பும், 18 வயதிற்கும் கீழ் உள்ள பெண்கள் கர்ப்பம் அடைந்தாலும் பாலியல் குற்றம் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், 18 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைந்தால் குழந்தை பெறும் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவர்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனை இயக்குனர் கலைவாணி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

குழந்தை பெறும் போது ஏற்படும் பாதிப்புகள்: “இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடைந்திருக்காது. அந்த தருணத்தில் கர்ப்பம் தரிப்பதால் குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இந்த பருவத்தில் கருத்தரிப்புக்கான ஹார்மோன்கள் உற்பத்தியாகி உடலில் மாற்றங்கள் நடைபெறத் தொடங்கினாலும், கர்ப்பப்பை பக்குவமடைந்திருக்காது.

அந்த நிலையில் கர்ப்பமடையும் போது கர்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுக்கொடி (Placenta) அந்தப் பகுதியில் ஒழுங்காக ஒட்டாமல் இருக்கும். அதனால் பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது. அத்துடன் கர்ப்பப்பை சுருங்கி, சுருங்கி விரியும் தன்மையையும் இழந்துவிடும்.

இதனால் கருவுற்றிருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும், தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாத நிலை கூட ஏற்பட்டு, தாய் உயிரிழக்க நேரும். தாயின் இடுப்பெலும்பின் வழியே குழந்தையின் தலை வெளியே வருவதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே குழந்தையை வெளியே எடுக்க வேண்டியிருக்கும். இந்த இடர்பாடுகளால் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதங்கள் அதிகரிக்கின்றன.

வளர் இளம் பருவத்தில் கர்ப்பம் அடைந்தால் பெண்கள் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? வளர் இளம் பருவத்தில் பெண்களின் உடலில் நிகழும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் உளவியல் ரீதியாக பெண்கள் பாதிப்படைந்திருப்பர். இந்த பருவத்தில் பெண்களுக்கு கூச்ச சுபாவமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகமாகவே இருக்கும். திருமணம், குழந்தைப்பேறு போன்ற அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ளும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவர்.

வளர் இளம் பருவத்தில் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சிறியதாக இருக்கும். அவர்கள் கர்ப்பமடையும் போது ரத்த நாளங்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரசவத்துக்குப் பிறகும் கூட உயர் ரத்த அழுத்தம் நிரந்தரமாக வாய்ப்புண்டு.

இளம் வயதில் கர்ப்பமடைவதால் தாய்ப்பால் சுரப்பதில் கூட சிக்கல் ஏற்படும். இளம் வயது பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் பக்குவம் அடைந்திருக்க மாட்டார்கள். குழந்தையைப் பராமரிக்கும் அளவுக்கு போதுமான முதிர்ச்சியைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மேலும், கருவைச் சுமக்கும் அம்மாவுக்கான உரிய வைட்டமின் பற்றாக்குறை இருக்கும். தாதுகள் குறைவாக இருக்கும். சத்து குறைவான, பலவீனமான நிலையில் கருவை சுமப்பது கடினமாக இருக்கும். 18 வயதிற்குட்பட்ட பெண்களின் இடுப்பளவு குறுகலாக இருக்கும். அதனால் பிரசவிக்கும் போது சிக்கலும் இருக்கும்.

இளம் வயதில் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இரும்புச்சத்து குறைபாடு கொண்டிருக்கும் பெண்களுக்கு, மேலும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கும் போது அது கருவில் இருக்கும் குழந்தையைப் பெரிதாக பாதிக்கக்கூடும்.

திட்டமிடப்படாத கர்ப்பங்கள், பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் அல்லது ஆதரவு இல்லாத இளம் வயது பெண்கள் மேலும் அதிகமான மனச்சோர்வை அனுபவிப்பார்கள். குற்ற உணர்ச்சியால் தூக்கமற்ற இரவுகள், கல்வி பெற பள்ளி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் என்பதால் சில தவறான எண்ணங்கள் பலரிடம் தோன்றுகிறது.

இந்த பிரச்னையில் பெற்றோர்கள், பள்ளிகள், மருத்துவத்துறை, சமூக நலத்துறை என அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பதிவாகும் பதின்ம வயது கர்ப்பங்கள், பிரசவங்களில் சம்பந்தப்பட்ட பெண்களிடம் குழந்தைத் திருமணம், காதல், பாலியல் வன்கொடுமையா என அதற்கான காரணம் என்ன? என்பதைக் கேட்டறிந்து பதிவு செய்ய வேண்டும். இந்த பிரச்னைக்கான தீர்வை எந்தெந்த திசைகளில் இருந்தெல்லாம் தொடங்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளச் செய்யும்.

பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்வது, உடலுறவில் இருப்பது உள்ளிட்ட பதின்ம பருவ சிக்கல்களுக்கு பள்ளிகளில் உரிய கவுன்சலிங் கொடுக்கப்பட்ட வேண்டும். 18 வயதிற்கும் கீழ் கர்ப்பம் அடைந்து வரும் பெண்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்கள் குறித்து விவரங்களை காவல்துறைக்கும் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குண்டான குழந்தைகளுக்கு 25 வயதிலேயே சுகர் வரும்! எச்சரிக்கும் ஆய்வறிக்கை - Child Obesity Leads To Early Death

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.