ETV Bharat / state

மின்கட்டண உயர்வைக்கண்டித்து வரும் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் - அண்ணாமலை!

author img

By

Published : Jul 19, 2022, 10:18 PM IST

மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போரட்டம் - அண்ணாமலை
மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போரட்டம் - அண்ணாமலை

மின்கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 23ஆம் தேதி பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம்: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜகவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆடிட்டர் ரமேஷின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ”திமுக தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு ஆண்டிற்கு ரூ.6000 சேமிப்பு ஆகும் எனக் கூறி தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இது மக்களின் தலையில் கல்லை போட்டது போல உள்ளது. மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணம் உயர்த்தியதாக கூறும் திமுக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக மத்திய அரசின் மின் மானியம் கிடைக்க வேண்டுமென்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்தால் மின்மானியம் கிடைக்கும் எனத்தெரிவித்திருந்தது.

ஆனால், மத்திய அரசின் மானியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தனியாரிடம் அதிக விலையில் வாங்கி தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதனை சரி செய்தாலே தமிழ்நாடு மின்மிகு மாநிலமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மூன்று விஷயங்கள் சரி செய்தாலே மின்பற்றாக்குறை இல்லாத மாநிலமாகத் திகழும். தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அனல் மின் நிலையங்களில் 60 விழுக்காடு மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதனை 80 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.

பாஜக சார்பில் போராட்டம்: சோலார் அமைக்க தமிழ்நாடு அரசு லஞ்சம் வாங்குகின்றனர். எனவே, தான் சோலார் பொருத்துவதற்குத் தயங்குகின்றனர். மக்கள் இதை சரி செய்து ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு 24 மணி நேரத்தில் சோலார் இணைப்புப் பெற வசதி செய்து தரப்பட வேண்டும். தனியார் நிறுவனத்திற்கு 48 மணி நேரத்தில் சோலார் இணைப்பு அமைக்க ஏற்படுத்தித்தர வேண்டும்.

மேலும், இதை எல்லாம் திமுக அரசு செய்யாமல் மின் பற்றாக்குறை எனக் கூறியும் மத்திய அரசு நிர்பந்தத்தினால் தான் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்,

இல்லை என்றால் வருகின்ற 23ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதன் பிறகும் தமிழ்நாடு அரசு மின் உயர்வை குறைக்காவிட்டால் அனைத்து மின்வாரிய அலுவலகம் முன்பும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு உளவுத்துறையே காரணம்: மேலும், ”கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த பிரச்னையில் தேவையற்ற தாமதமே கலவரத்திற்குக்காரணம் என்றால், திறமை இல்லாத அரசாங்கத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை எல்லாம் அவரின் சொந்தப்பள்ளியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவி உயிரிழந்து நான்கு நாட்கள் கழித்து ஐந்தாவது நாள் பள்ளியில் ஆய்வு செய்து அமைச்சர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. காவல் துறையும் செயல் இழந்து உளவுத்துறை செயல்படாமல் இருந்ததால்தான் தற்பொழுது இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற்றது” என்றார்.

இதையும் படிங்க: கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க ஆலோசனை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.