ETV Bharat / state

“காங்கிரஸ், திமுகவை வளர்க்க வேண்டியதில்லை” - அமைச்சர் ரகுபதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:11 AM IST

ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அளவுகோல் உள்ளது
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

Minister Reghupathy: எடப்பாடி பழனிசாமி பிரதமராக வாய்ப்புள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை ஜோக்காக எடுத்துக் கொள்ளலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு

புதுக்கோட்டை: நத்தம்பண்ணை ஊராட்சியில், பகுதிநேர நியாய விலைக் கடையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, கடந்த முறை ஆட்சி செய்தவர்கள் தொடங்கிய திட்டத்தை ஆட்சி செய்பவர்கள் திறந்து வைப்பது வழக்கமான ஒன்று.

எடப்பாடி பழனிசாமி கூறுவது போன்று, அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கிய திட்டத்தைதான் நாங்கள் தொடங்கி வைக்கிறோம் என்று கூறுவது தவறு. கிங்ஸ் மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. ஒரு சில திட்டங்கள் மட்டும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம். அது இயற்கையான ஒன்று” என்று கூறினார்.

ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஒரு ஆளுநர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு அளவுகோல் உள்ளது. ஆனால், தமிழக ஆளுநர் வரம்பு மீறி பேசியதற்கு டி.ஆர்.பாலு விளக்கம் கொடுத்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு உரிய மரியாதை அளித்து வருகிறது. சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்கள் ஆகியோர்களுக்கு நினைவு மண்டபங்கள் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவர்களது நினைவு விழாவை நடத்தி வரும் ஒரே அரசு, திமுக அரசு.

வரலாறு எல்லாம் தமிழில் இருப்பதால், ஆளுநருக்கு புரியவில்லை. அவர் யாரோ எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார். காங்கிரஸ், திமுகவை வளர்க்க வேண்டியதில்லை. திமுக ஏற்கனவே வளர்ந்த கட்சிதான். நாங்கள் எங்களை வளர்த்துக் கொள்கிறோம். அவர்கள் அவர்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

மேலும், பாஜகவின் B டீம்தான் அதிமுக. சிறுபான்மையினர் வாக்கு ஒருபோதும் அதிமுகவிற்கு கிடைக்காது. சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வந்தபோது எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார்? எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டார்? எடப்பாடி பழனிசாமி பிரதமராக அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி இருப்பது, ரொம்ப மகிழ்ச்சியான செய்தி. அவர் எப்பொழுதும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் என்பதால், இவற்றை நாம் ஒரு ஜோக்காக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மகளிர் உரிமை திட்டத்தில் மாதந்தோறும் ரிவ்யூ செய்யப்படும் என்று அரசு உத்தரவிட்டது, பொதுமக்களுக்கு லாபம்தான். தகுதியான நபர்கள் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தீவிரவாத செயலாக பார்ப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.