ETV Bharat / state

குடிநீர் விநியோக விவகாரம்; ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்! - madras high court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 3:31 PM IST

Updated : May 18, 2024, 3:48 PM IST

Madras high court: சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்கு 96 கோடியே 10 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டியாக செலுத்தும்படி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி ( 96 கோடியே 10 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டும் என, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜிஎஸ்டி வரம்பிலிருந்து அரசு நிறுவனம் வழங்கும் சேவைகளுக்கு விலக்களித்து 2017ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீகரற்று வாரியம் அரசு நிறுவனம் என்பதால், அந்த நிறுவனம் வழங்கும் சேவைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு பொருந்தும் என வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், குழாய் மூலம் குடிநீர் விநியோகிப்பது மட்டுமல்லாமல் வர்த்தக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்வதால் அது ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வரும் எனவும், அதனால் வரி செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரி செலுத்தக்கூறி உத்தரவு பிறப்பிக்கும் முன் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கருத்தைக் கேட்கவில்லை எனவும், சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகிக்கப்பட்டதா? என்பதை தெளிவுபடுத்தாமல் வரி செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், 3 கோடி ரூபாயை ஆறு வாரங்களில் செலுத்தும்படி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இத்தொகையை செலுத்திய மூன்று மாதங்களில், குடிநீர் வாரியத்துக்கு உரிய வாய்ப்பை வழங்கி புதிதாக உத்தரவு பிறப்பிக்கும்படி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு - காரணம் என்ன? - Nagapattinam To Kankesanthurai Ship

Last Updated : May 18, 2024, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.