நாமக்கல்: அன்புநகர் அருகே செங்காளிகரடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது எட்டு வயது மகனான சஞ்சீத் ஆரவ் வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடம் அருகே நேற்று (ஜூலை 12) மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் சிறுவனின் தாயார் பவியா பல இடங்களில் தேடியுள்ளார். இதனையடுத்து புதிதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடத்தின் தண்ணீர்த் தொட்டியில் பார்க்கும்போது அங்கு சஞ்சீத் ஆரவ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு
இது குறித்து, நாமக்கல் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: போக்சோவில் கைதான ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!