நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவின் சரிவு தொடங்கியது, உள்ளாட்சியில் அதன் விளைவு பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் கட்சியினரின் பாணியை தற்போது திமுக செய்துவருகிறது. காங்கிரசிற்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கும் தன்மை இல்லை. அதனடிப்படையிலேதான் தற்போது திமுகவும் செய்தது. அதனால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டு வருத்தங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை இழிவாகப் பேசிய நெல்லை கண்ணனுக்கு நீதிமன்ற பிணை மட்டுமே கிடைத்துள்ளது. குற்றவாளி இல்லை என அறிவிக்கவில்லை. நெல்லை கண்ணன் ஒருமுறை பேசும்போது, 'இஸ்லாமியர்களை ஆளும் பாஜக அரசு தரக்குறைவாக நடத்தியது . இதற்காக டெல்லியில் சில இஸ்லாமியர்களைச் சந்தித்துப் பேசினேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாடி சுரேஷின் கொலை தொடர்பான குற்றவாளிகள் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர் பேசியதற்கும் இன்று கைதானவர்களுக்கும் தொடர்புள்ளது. நெல்லை கண்ணனுடைய டெல்லி தீவிரவாதிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" எனக் கூறினார்.
சீமான் சமீபத்தில் தான் ஒரு இந்தியனே இல்லை எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய ஹெச். ராஜா, எனவே சீமான் வேல்முருகன் போன்றவர்கள் இந்த நாட்டில் இருக்க தகுதியற்றவர்கள் எனவும் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சாடினார்.
இதையும் படிங்க: பாஜகவின் ஆதரவால் குமரியைக் கைப்பற்றிய அதிமுக