ETV Bharat / state

அரசு அறிவிக்கும் திட்டங்களை, அதிகாரிகள் 3 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்

author img

By

Published : Jul 14, 2023, 11:26 AM IST

Etv Bharat
Etv Bharat

சட்டசபையில் முதலமைச்சர் ஒப்புதலோடு அமைச்சர்கள் அறிவிக்கப்படும் திட்டங்களை 3 மாதத்திற்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், மணக்குடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பூம்புகார் கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், சுற்றுலா மைய மேம்பாட்டுப் பணி, திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரம்பூர் காவல் நிலையம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் 1773ல் கட்டப்பட்ட டேனிஷ் ஆளுநர் மாளிகையையும் சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் ஆய்வு செய்தார்.

சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் பேட்டி

அதனைத் தொடர்ந்து திருவிழந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அதில், சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் அனைத்துத்துறை அதிகாரிகளிடமும் வளர்ச்சி திட்டப் பணிகளின் நிலவரம் குறித்தும், பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், "சட்டசபையில் முதலமைச்சர் ஒப்புதலோடு அமைச்சர்கள் அறிவிக்கப்படும் திட்டங்களை 3 மாதத்திற்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் திட்டங்கள் மக்களிடம் தடையின்றி செல்ல வேண்டும். அதற்கு அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலருக்கும் ஒருவகையில் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான ஆற்றல் படைத்தவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு 85 பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 111 பணிகள் ஒப்புதல் பெற்ற நிலையில் உள்ளது. சாலை அமைத்தல், வாய்க்கால் தூர்வாருதல் என நீண்டநாளாக 38 பணிகள் நிலுவையில் உள்ளது. அதில் 8 பணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளோம்.

தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறக்க குழுவிற்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்க்கரைத்துறை ஆணையரை அழைத்து இந்த சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்குக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மயிலாடுதுறை புறவழிச்சாலை அமைப்பதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி முடிவடையும் அதன்பிறகு பணிகள் தொடங்கும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் CT ஸ்கேன் உள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. CT ஸ்கேன் மருத்துவர் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இல்லை என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளீர்கள் இது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய விளைபொருட்கள் பாதுகாப்பதற்கான கிடங்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைபெய்து விளைபொருட்கள் சேதமடைந்திருப்பது குறித்து குழுவிற்கு புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு பேருந்தா? தனியார் விளம்பர வாகனமா? பொதுமக்கள் குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.