மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, மயிலாடுதுறை நகராட்சியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சந்திப்பு கூட்டம் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், திமுக மாவட்ட பொறுப்பாளர், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களைப் பாராட்டினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலைவிட உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளால் 20 விழுக்காடு வாக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த 9 மாத காலம் ஆட்சியில் ஆளும் கட்சி வெற்றி பெற்ற தொகுதி மட்டுமின்றி, எதிர்கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதி உட்பட 234 தொகுதியிலும் நலத்திட்டஉதவிகளை கொண்டு சேர்த்ததோடு, வளர்ச்சி பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தார். அதனால் தான், 20 விழுக்காடு வாக்கு அதிகரித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி தனக்கு வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணிக்கின்ற நிலையில், அவர் பிரதமராக இருந்தும் வாக்கு வங்கி உயரவில்லை. தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் மாபெரும் வெற்றி தந்துள்ளனர். திமுக வெற்றி பெற்ற பகுதி மட்டுமின்றி மாற்றுக்கட்சியினர் வெற்றி பெற்ற பகுதிகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை பகுதி மக்களின் முக்கிய பிரச்சினைகளான பாதாளச் சாக்கடை கழிவுநீர், குடிநீர், சாலை, தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றதும் நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டும் என்றார். இதில் மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.ராஜகுமார் மற்றம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Valimai FDFS:செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்