மயிலாடுதுறை: குடிபோதையில் திருநங்கைகளை தகாத முறையில் பேசியவரை கொலை செய்த 5 பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை ஆற்றங்கரை தெரு வேதம்பிள்ளை காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஐயப்பன்(48). இவர் நேற்றிரவு குடிபோதையில் அதே பகுதியை சேர்ந்த திருநங்கைகள் கலைச்செல்வி, மணிமேகலை, சூர்யா, மகா, கிருத்திகா ஆகியோரை தகாத முறையில் பேசியுள்ளார். இதுகுறித்து திருநங்கைகள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திருநங்கைகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறை திருவிழந்தூர் ஜெ.ஜெ நகரை சேர்ந்த ரஞ்சித்(18), வேதம்பிள்ளை காலனியைச் சேர்ந்த கணேசன்(43), பஜ்ருதீன்(21), அருள்ராஜா(24) கூறைநாடு, மேலஒத்தத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (19) ஆகிய 5 பேரும் ஐயப்பன் வீட்டிற்குச் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து 5 பேரும் சேர்ந்து ஐயப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். மயங்கிக் கிடந்த ஐயப்பனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐயப்பன் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் ஐயப்பனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஐயப்பனை கொலை செய்த 5 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட ஐயப்பன் மீது 2006ம் ஆண்டு முதல் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. காவல் நிலைய குற்றவியல் பட்டியலில் உள்ள ஐயப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக முதியவரை கொலை செய்த 14 பேர் கைது!