ETV Bharat / state

Video - நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

author img

By

Published : Jan 3, 2023, 4:31 PM IST

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்: வைரல் வீடியோ
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்: வைரல் வீடியோ

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 466-ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.

Video - நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து துவங்கியது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நாகை எஸ்.பி. ஜவஹர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக வந்த சந்தனக் கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களைத் தூவி வழிபட்டனர்.

ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம், தாரை தப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை நாகூர் தர்ஹா வந்தடைந்தது.

தர்கா கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு துவா ஒதப்பட்டு பாரம்பரிய முறைப்படி ஆண்டவரின் வம்சவாளிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். சந்தனம் பூசும் வைபவத்தில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து மயக்க நிலை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப் பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றி இருந்த இஸ்லாமியர்கள் அவரைத் தொட்டு வணங்கினர். பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்ட காவல்துறை சார்பாக 1050 காவலர்கள், 150 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று(ஜன.3) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 6ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா நிறைவுபெறுகிறது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்: கடிதத்தை மறுத்த அதிமுக... தேர்தல் ஆணையத்துக்கு பறந்த மெயில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.