மதுரை: சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வருகை தந்த தாய்-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான பிஎஃப் 7 குறித்து விமான நிலையத்தில் தொடர் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
செய்வாய்கிழமை காலை 9:40 மணியளவில் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 70 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த பயணியிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் 39 வயது பெண் மற்றும் அவரது 6 வயது மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சீனாவில் வேலை பார்த்து வரும் நிலையில் குடும்பத்துடன் சொந்த ஊருக்குத் திரும்பிய போது இருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் நிலவும் மூடுபனியால் விமான சேவை பாதிப்பு!