ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: மளமளவென உயர்ந்த மல்லிகை விலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 6:42 PM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மளமளவென உயர்ந்த மல்லிகை பூ விலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மளமளவென உயர்ந்த மல்லிகை பூ விலை

Jasmine Price Increase: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், மல்லிகை வரத்து மிகக் குறைவாக உள்ளதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மளமளவென உயர்ந்த மல்லிகை பூ விலை

மதுரை: மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் மல்லிகை மலர் தனிச்சிறப்பு பெற்றதாகும். இந்நிலையில், அனைத்து விழாக்களிலும் இடம் பெறும் மல்லிகை மலர், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், மல்லிகை வரத்து மிகக் குறைவாக உள்ளதே இந்த கிடுகிடு விலையேற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் (மாட்டுத்தாவணி) அருகே உள்ள வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில், மலர் வணிக வளாகம் இயங்கி வருகிறது.

இங்கு சோழவந்தான், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சத்திரப்பட்டி, வலையங்குளம், சிலைமான் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பூக்கள் விற்பனையாகிறது. அதில், மதுரையின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாகவும், தரம், மணம், தன்மை காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகை, ஏறக்குறைய 7 டன்னுக்கும் மேலாக விற்பனையாகிறது. மேலும், மதுரை மலர் சந்தையில் நிர்ணயிக்கப்படுகின்ற பூக்களின் விலையே பெரும்பாலான தென்மாவட்டங்களின் விலையாக உள்ளது.

இதையும் படிங்க: “வீரலட்சுமியின் மற்றொரு அவதாரத்தை இனிமேல் பார்பீர்கள்”.. சீமானை எச்சரித்த வீரலட்சுமி!

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், தற்போது பூக்கள் வரத்து குறைவு காரணமாகவும் மதுரை மல்லிகை இன்று காலையில் (செப்.15) கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் பிற்பகலில் ரூ.1,300 மற்றும் ரூ.1,200க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து, பிற பூக்களைப் பொறுத்தவரை, சம்பங்கி ரூ.200, முல்லை ரூ.800, பிச்சி ரூ.700, அரளி ரூ.250, சென்டு மல்லி ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “மல்லிகையைப் பொறுத்தவரை பெருமளவு வரத்து குறைந்துள்ளது. இவ்வாறு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருகின்ற காரணத்தால் மல்லிகையானது ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிக்குமானால் விலை குறைய வாய்ப்புண்டு” என்றார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.