கரூர்: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர் சுப்பிரமணி. இவர் கரூர் - கோவை இடையேயான சாலையில் உள்ள கொங்கு மெஸ் கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (ஜன.10) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தவகையில், காலை 10 மணியளவில் இரண்டு வாகனத்தில் வந்த, 10 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள், கொங்கு மெஸ் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர், மூன்று மணி நேரத் தீவிர சோதனைக்குப் பிறகு மதியம் 1.30 மணி அளவில் திரும்பிச் சென்றனர். முன்னதாக, கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி முதல் ஜீன் 2ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள், நண்பர்கள் வீடு என 20 இடங்களில் தொடர்ந்து 8 நாட்கள் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: பேருந்துகள் சகஜமாக இயங்குவதாக கூறுவது உண்மையில்லை - சிஐடியு சவுந்தரராஜன் கடும் தாக்கு!
அச்சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணிக்கு சொந்தமான கடையில் இன்று காலை 10 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில், சுப்பிரமணியின் சொத்துகளை மதிப்பீடு செய்வதற்காக ஆய்வு நடைபெற்றதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 12ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி முறையீடு செய்த ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பரான கொங்கு மெஸ் சுப்பிரமணி என்பவரின் கடையில், வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கடலூரில் தற்காலிக பேருந்து ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து விபத்து!