ETV Bharat / state

‘நான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது’- கரூர் திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி!

author img

By

Published : Apr 4, 2021, 6:06 PM IST

திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி
திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி

கரூர்: கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, தேர்தல் பரப்புரை, மக்களுக்கு செய்யவுள்ள திட்டங்கள் குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு மூலம் விளக்குகிறார்.

கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இம்முறை திமுக நேரடியாக மூன்று தொகுதிகளில் அதிமுகவையும், ஒரு தொகுதியில் பாஜகவையும் எதிர்த்துப் போட்டியிடுகிறது. இது குறித்து வழக்கறிஞர் சிவகாமசுந்தரி நமது ஈடிவி பாரத் தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள சிறப்பு நேர்காணல் குறித்து காண்போம்.

  • கிருஷ்ணராயபுரம் தனித்தொகுதியில் போட்டியிடும் உங்களுக்குப் பொதுமக்களிடம் வரவேற்பு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

“கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்டுவந்த அதிமுக அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு எதிராக நீட்தேர்வு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு போன்றவற்றை ஆதரிப்பதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என என்னிடம் தெரிவிக்கிறார்கள். ஆகவே எனக்கு வெற்றி வாய்ப்பு இப்பகுதியில் அதிகமாக உள்ளது”.

  • சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிப் பெற்றால் எந்த மாதிரியான மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க முன்னுரிமை வழங்கி செயல்படுத்துவீர்கள்?

“கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி என்பது பெரும்பாலும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதி. இங்குள்ள ஊராட்சிகளில் ஆழ்குழாய் குடிதண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. காவேரி ஆற்றங்கரை அறியாமையில் முறையான கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், கரூர் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்குக் காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்கப்படுவதைப்போல கிருஷ்ணராயபுரம் தொகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தி, குடிநீர் பிரச்னையை முதலில் தீர்க்க முன்னுரிமை வழங்குவேன்.

மேலும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குக் கழிப்பிடம் வசதி, சாலை வசதி, வடிகால் வசதி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து எனது கிருஷ்ணராயபுரம் தொகுதியை ஒரு முன்னுதாரணமான தொகுதியாக மாற்றி காட்டுவேன்”.

  • குளித்தலை பகுதியைச் சார்ந்த நீங்கள் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடுவதால் மக்களை சந்திக்க முடியாது என உங்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகிறார்கள். அதை எவ்வாறு எதிர்கொண்டு வருகிறீர்கள்?

“நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவள். இது எனது சொந்த மண். குளித்தலை கிருஷ்ணராயபுரம் அதிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. கரூர் - திருச்சி சாலையிலுள்ள காந்திகிராமம் பகுதியில் நான் குடியிருக்கிறேன் அங்கே சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளேன். நான் மிகவும் எளிமையான பெண். என்னை மக்கள் எப்பொழுதும் எளிதில் அணுகலாம்.

திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி

கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, தொகுதி பக்கம் வெற்றிப் பெற்றதற்கு பிறகு வரவில்லை என பொதுமக்கள் செல்லுமிடங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். நீங்கள் அவரைப்போல இல்லாமல் தொகுதிப் பக்கம் அடிக்கடி மக்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். வாரத்துக்கு இருமுறை பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து முன்னுதாரணமான சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெயரை எடுப்பேன்” என்று முடித்தார்.

இதையும் படிங்க: குன்னூர் தொகுதி வேட்பாளர்கள் ஈடிவி பாரத்திடம் கூறும் வாக்குறுதிகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.