ETV Bharat / state

ஆபாச வீடியோவை பரப்பிவிடுவதாக பெண்ணை மிரட்டியவர் கைது!

author img

By

Published : Mar 13, 2023, 4:03 PM IST

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரியில் பெண்ணின் ஆபாச புகைபடம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வேன் எனக் கூறி மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாலியல் ரீதியான தொந்தரவுகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்க சைபர் கிரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த, காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

இவை குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பெண்களைக் குறிவைத்து ஆன்லைன் மூலமாக பெரும் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை கண்டறிவதும் அவர்களைக் கைது செய்வதும் காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு, ஒரு செல்போன் எண்ணிலிருந்து வாட்ஸ் அப் வழியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அவர், ஒரு கட்டத்தில் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதும், பின்னர் இணையதளத்தில் அப்பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை பரப்பிவிடுவதாக கூறி மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார்.

உடனடியாக அப்பெண், இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்திடம் நேரடியாக புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்டதும் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான சைபர் கிரைம் காவல் துறையினர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டிய நபர் யார் என்பதை கண்டறிந்தனர். பின்பு குற்றவாளியைப் பொறிவைத்துப் பிடித்தனர். அந்த நபர் கேரளா மாநிலம் மூணாறு பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்பவரது மகன் ராஜ்குமார் (39) என்பது தெரியவந்தது. மேலும், தற்போது மதுரையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. சைபர் கிரைம் காவல் துறையினர் அந்நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இப்படிபட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆகையால் இப்படிப்பட்ட குற்றச் சம்பவங்கள் நடந்திருந்தால் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட செயல்களிலிருந்து விடுபடப் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை இல்லாத இணைப்புகள், தேவை இல்லாத மெசேஜ்கள் அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சமையல் செய்ய தாமதமானதால் சண்டை.. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.