ETV Bharat / state

தொடர் மழை - செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரிப்பு

author img

By

Published : Nov 12, 2022, 10:31 PM IST

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஏரியின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பானது ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி நீர்மட்ட உயரம் 20.15 அடியும், நீர் வரத்து 1510 கன அடியும், நீர் வெளியேற்றம் 500 கன அடி என மொத்த கொள்ளளவு 2641 மில்லியன் கன அடியாகவுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது இன்று மாலை 3 மணியளவில் ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படுமென்றும், ஆகையால் நீர் வெளியேறும் பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் 500 அடியிலிருந்து, கூடுதலாக 500 கன அடி நீரானது இன்று (நவ.12) திறக்கப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கனஅடி நீரானது தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது படிப்படியாக மேலும் உயர்த்தப்படும் எனவும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 20 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை 15% அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.