ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை 15% அதிகரிப்பு: வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Nov 12, 2022, 2:30 PM IST

Updated : Nov 12, 2022, 3:09 PM IST

பருவ மழையின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharatமழையின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது - வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன்
Etv Bharatமழையின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது - வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தென்மேற்கே வங்க கடல் பகுதியில் நேற்று (நவ-11)நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(நவ-12) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதிக கனமழையும், 14 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மழையாகும். தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் 12,13 தேதிகளில் பரவலாகவும், 14 ,15ல் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை ஒரு இடங்களில் கனமழை மிக கனமழையும், சென்னை முதல் கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு வடதமிழ்நாடு தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடகிழக்க பருவமழையை பொருத்தவரை கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு இயல்பை விட 15 சதவீதம் அதிகமாக உள்ளது" என கூறினார்.

வானிலை அறிக்கை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று(நவ-11) வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ-12)காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழ்நாடு, புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று(நவ.12) பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.13ஆம் தேதி அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவ.14 முதல் நவ-16 ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை : அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழையின் அளவு 15 சதவீதம் அதிகரித்துள்ளது ...பாலசந்திரன்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று(நவ.12) வட தமிழ்நாடு கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.13ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.14ஆம் தேதி லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நவ.16ஆம் தேதி தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

Last Updated : Nov 12, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.