ETV Bharat / state

"அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்தில் முதலமைச்சர் துவக்கி வைப்பார்" - அமைச்சர் முத்துசாமி!

author img

By

Published : Mar 14, 2023, 7:28 AM IST

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் 25 நாட்களில் முடிவடையும் என வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி தலைமையில் அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை பொறுத்தவரை ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் பாக்கியுள்ளன.

98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் நீதிமன்ற வழக்கு இருப்பதன் காரணமாக 200 மீட்டர் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சாலை மேம்பாடு உள்ளிட்ட 600 மீட்டர் மட்டுமே பணிகள் உள்ளன. 6 பம்பிங் ஸ்டேஷனில் 5 பம்பிங் ஸ்டேஷன்களில் சோதனைகள் முடிந்தன. 6வது பம்பிங் ஸ்டேஷன் சோதனை நடைபெற உள்ளது. அதுவும் 3 நாட்களில் முடிவுறும்.

சாலையை ஓட்டி போடப்படு உள்ளதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்திகடவு - அவிநாசி திட்ட பணிக உள்பட அனைத்து பணிகளும் 25 நாட்களுக்குள் முடிவு பெறும். என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவது, நிறுவனத்திற்காக நிலம் எடுப்பது இல்லை. இந்த திட்டத்திற்காக தான் நிலம் எடுக்கப்படுகிறது.

எந்த மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆய்வு நடந்து வருகிறது. இரண்டு விதமான கருத்து உள்ளது விவசாயிகளிடம் பேசி அரசு நேரடியாக நிலம் கையகப்படுத்தும் போது குறைவான இழப்பீடும், தனியார் கையகப்படுத்தும் போது கூடுதலான இழப்பீடும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும்.

நீதிமன்றம் பிரச்சினை காரணமாக திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. முதன்மை குழாய் செல்லும் வழியில் எந்த பிரச்சினையும் இல்லை. 1,045 குளம் தண்ணீர் செல்ல பணிகள் முடிக்கபட்டு உள்ளது. 15 குளம் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

ஓரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு முதலமைச்சர் திறந்து வைப்பார். விடுபட்ட குளங்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள் ஆய்வு செய்யபட்டு வருகிறது. வட மாநில தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு அந்த மாநிலத்தின் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு செய்து பிரச்சினை இல்லை என்று கூறிவிட்டனர்.

எங்காவது நடக்கும் ஓரு சில பிரச்சினையை வட மாநிலத்தவர்களுக்கும், தமிழ்ரகளுக்கும் பிரச்சினை என்று பிரச்சினையாக மாற்றி விடுகின்றனர். அதுவே இரண்டு தமிழர்களுக்கும் இரண்டு வடமாநிலத்தவர்களுக்கும் இடையே நடந்து இருந்தால் இதுபோன்று பிரச்சினை ஏற்படுவது இல்லை மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர்.உரிமை என்பது தான் பிரச்சினையே தவிர பாதுகாப்பு என்பது பிரச்சினை இல்லை" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் நடைபெற்ற கீழ்பவானி கால்வாயில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் உடைய விவசாயிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை மேற்கொண்டார். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்க மாறுபட்ட கருத்து உள்ள நிலையில் விவசாயிகளிடம் கான்கிரீட் தேவை குறித்து பட்டியல் கேட்டது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நான்கு நாட்களில் பட்டியல் தயார் செய்து கொடுப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளதாகவும், இரண்டு தரப்பிலும் சுமூகமான தீர்வு ஏற்பட்டு சரியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கான்கிரீட் தேவைப்படும் இடம் குறித்து அளிக்கப்படும் பட்டியல் அளித்த பிறகு மற்றொரு தரப்பு விவசாயிகளை அழைத்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு விவசாயிகளிடமும் பேசி சுமூக முடிவு எடுத்தப் பிறகு தான் கான்கிரீட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மொழி தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.