ETV Bharat / state

“சென்னிமலை குறித்து பேசிய கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர் கைது”..சேகர்பாபு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:05 AM IST

சென்னிமலை முருகன் கோயில் மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னிமலை முருகன் கோயில் மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னிமலை முருகன் கோயில் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர் கைது

ஈரோடு: சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நேற்று (அக்.18) நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மக்கள் செய்தி தொடர்பு துறை அமைச்சர் முத்தூர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது,“சென்னிமலை முருகன் கோயில் 700ஆண்டுகள் பழமையான கோயில். இது பல்வேறு வரலாறு சிறப்புகளை உள்ளடக்கியது. இந்த கோயிலுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியைச் சுற்றி முள்வேலி மண்டபம் கட்டுவது, தார் சாலை அமைப்பது போன்றவை வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ரூ. 6 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 24 திருப்பணிகள் ரூ.12 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் ரூ.300 கோடி மற்றும் சுவாமி மலையில் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்தணிக்கு மாற்று பாதை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆறுபடை முருகன் கோயில்களும் மேம்படுத்தபட்டு வருகிறது.

குறிப்பாக வடபழனி கோயில் மற்றும் மருதமலை உள்ளிட்ட முருகன் தலத்திற்கு மட்டுமே ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு படை திருக்கோயில்களில் ரூ.3.24 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. வரலாற்று காணாத வகையில் 411 பணிகள் ரூ.700 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னிமலை முருகன் கோயில் மீது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த சரவணன் 501,505,295 ஆகிய பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பார். இந்த வழக்கில் மற்றொருவரும் இன்றுக்குள் கைது செய்யப்படுவார். விரைவில் வருவாய் துறையினர் தலைமையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மேலும், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இந்து அறநிலையத்துறையின் கீழ் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோயில் சொத்துக்கள் இறைவனுக்கு என்ற அடிப்படையில் சொத்து மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு மீது புகார் கொடுக்க இந்து அறநிலையத்துறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளதால், ஜெயக்குமார் சுதந்திரமாக பேட்டி கொடுத்து வருகிறார். சென்னிமலை விவகாரம் ஆர்டிஓ தலைமையில் இரண்டு பிரிவினரையும் வரும் 20ம் தேதி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டவுள்ளது. திமுக ஆட்சியில் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் சனாதனம் குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது” என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், “லியோ படத்தில் டிக்கெட் கட்டணம் உயர்வு உள்ளிட்ட விதிமீறல்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். லியோ படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் அல்லாது மற்ற நாட்களில் 4 மணிக்கு பதிலாக 9 மணியிருந்து தமிழக அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: "இந்தியா கூட்டணியில் யார் யார் பிரதமர் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.