ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி கோயிலில் கருணை இல்லம் செயல்பட்டுவருகிறது. இங்கு பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் 25 பேர் படித்துவருகின்றனர். இவர்கள் படிக்கும் பண்ணாரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் கட்டடங்கள் இடிந்துவிழும் நிலையில் காணப்பட்டது.
மேலும், மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் கழிவறை வசதி இல்லாத சூழலும் நிலவியது. இது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் செய்தி வெளியானது.
இதனடிப்படையில் தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சரின் உத்தரவின்பேரில், சென்னை கல்வி இயக்குநரகம் புதிய கட்டடம் கட்டவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டனர். இதையடுத்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலர், பண்ணாரி கோயில் நிர்வாகம் ஆகியோர் இணைந்து புதிய கட்டடம் கட்ட முன்மொழிவு அனுப்பினர்.
இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் 16 லட்சம் ரூபாய் அனுமதியளித்து கட்டுமான பணிக்கு உத்தரவிட்டார். அதன்படி முதலில் மாணவிகளுக்காக நவீன கழிப்பறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் சமையலறையைப் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது. செய்தி எதிரொலியாக ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுக்கு ஆதரவு கிடைத்ததையடுத்து அம்மாணாக்கர் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஆபத்தான பள்ளிக்கட்டடம்' 'பழுதடைந்த கழிப்பறை' - சீரமைக்க கோரிக்கை!