ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பண்ணாரி கோவில் நிர்வாகம் சார்பில் கருணை இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 35 குழந்தைகள் அவர்கள் கல்வியை தொடருவதற்காக கோவில் வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்காக 1973ஆம் ஆண்டு கட்டப்பட்ட இரு கட்டடங்கள் உள்ளன.
ஆனால், ஒரு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து பழுதடைந்ததால் அதனருகே உள்ள மற்றொரு கான்கிரீட் கட்டடத்தில் பல நாள்களாக பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இடியும் நிலையில் உள்ள கட்டடத்தின் அருகில் குழந்தைகள் செல்வது, விளையாடுவது ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி 20 பெண் குழந்தைகள் பயிலும் இப்பள்ளியில் கழிவறையும் உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும் மாறிவிடுகிறது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சிதலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி புதியதாக கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், "பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்துள்ளோம், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பள்ளியில் மகனுக்கு சீட் கேட்டதில் தகராறு - தந்தை தற்கொலை முயற்சி!