ETV Bharat / state

’அன்றாட உணவுக்கே திண்டாட்டம்’ - வறுமையின் பிடியில் சிக்கிய மூத்த தம்பதி தற்கொலை

author img

By

Published : Aug 17, 2020, 5:19 AM IST

old couple
old couple

திண்டுக்கல்: வறுமையின் காரணமாக முதிய வயது தம்பதி பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசிப்பவர் தர்மராஜ் (65), இவரது மனைவி காளியம்மாள் (54). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. தர்மராஜ் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் சலூன் கடை நடத்திவந்தார். இதன் மூலம் கிடைக்கும் வருமானமே இவர்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தர்மராஜ் சலூன் கடையை திறக்க முடியாமல் வறுமையில் இருந்துள்ளார். பின்னர் ஊரடங்கு தளர்வுகள் ஏற்பட்டு, கடை திறக்க அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், கண் பார்வை சரியாக தெரியாததால் சலூன் கடையை நிரந்தரமாக மூடியுள்ளார். இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலையில் இவர்கள் அல்லல்பட்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து வறுமை வாட்டியதாலும், உறவினர்களின் ஆதரவு இல்லாததாலும் மனம் உடைந்துபோன தம்பதியினர் வீட்டிலேயே பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்களுக்கு தினமும் சூப் கொடுக்கும் பெண் ஒருவர் வழக்கம்போல் நேற்றும் (ஆக.16) சூப் கொண்டு சென்றுள்ளார். அப்போது, தர்மராஜ் கட்டிலின் கீழேயும், காளியம்மாள் வாசற்படி அருகேயும் உயிரிழந்து கிடந்தனர்.

தகவலறிந்த அம்பாத்துரை காவல் ஆய்வாளர் சத்யா, உதவி ஆய்வாளர் முத்தமிழ் செல்வி சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த தம்பதியினர் உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக சின்னாளப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வறுமையின் காரணமாக மூத்த தம்பதி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.