கோயம்புத்தூர்: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், துணிவு. இப்படம் இன்று (ஜன.11) பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. முதன்முதலில் தமிழ்நாட்டிலேயே துணிவு படத்தின் சிறப்பு காட்சிதான் நள்ளிரவு 1 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்காட்சியை காண, ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை பூ மார்க்கெட்டில் உள்ள அர்ச்சனா தர்ஷனா திரையரங்கில் துணிவு படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால், திரையரங்க வாயில் கதவை நேற்றிரவு 11.30 மணி அளவில் உடைத்துக்கொண்டு ரசிகர்கள் உள்ளே புகுந்தனர்.
அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் காவல் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆனாலும், ரசிகர்கள் கண்ணாடி, கைப்பிடி இரும்பு ஆகியவற்றை உடைத்துக் கொண்டு தியேட்டருக்குள் புகுந்தனர்.
இதில் காயம் ஏற்பட்டவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேலும் கருமத்தம்பட்டியில் உள்ள திரையரங்கில் நள்ளிரவு காட்சி திரையிட தாமதமானதால், ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்தனர். அதேபோல் அன்னூரில் உள்ள திரையரங்குகளில் வாரிசு திரைப்படத்திற்கு 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆம்பூரில் 'துணிவு' படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்த 100 அடி பேனர்!