கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவில்பாளையம் பகுதியில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுவருகிறார். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான திட்டங்களை நிறைவேற்றிவருகிறார்" எனத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னைகளை வைத்து அரசியல் செய்பவர் ஸ்டாலின். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியைத் தவிர ஸ்டாலினுக்கு தலைவராவதற்கு வேற எந்த தகுதியும் இல்லை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தடுக்க டெல்டா மாவட்டங்கள் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இளைஞர், இளம் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுத்ததால் அதிகமானோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'திமுக எம்.பி., மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்' - அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை