நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட காவிரி கரையோரப் பகுதிகளான ஆவாரங்காடு, ஜனதா நகர் உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்த 715 குடும்பங்கள், பாதுகாப்பான பகுதியில் தங்குவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மண்கரடு பகுதியில் 338 குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கு ஏற்றார் போல் இந்த நிலத்தை சமன் செய்து தகுதியுள்ள 338 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மண்கரட்டில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மின்சார துறை அமைச்சர் தங்கமணி, 338 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்து சுய விளம்பரத்துக்காக நாமக்கல் எம்.பி., பொய் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் என்றும் குற்றாச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை எனில் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரித்தார்.
திமுக ஆட்சியில் கோவை அடுக்கு மாடி குடியிருப்பு தரமற்று கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அமைச்சர், சூரிய ஒளி மின்சார நேரத்தை கணக்கிட்டு விவசாயத்துக்கான மும்முனை இணைப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு பாதிப்பும் ஏற்படும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படாது என்றும், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்றும் உறுதியளித்தார்.