கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர், தனது நண்பரான கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரியுடன் இரு தினங்கள் முன்பு இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சென்றார். அதன்பின் ஊருக்கு திரும்புகையில் காளப்பட்டி நான்கு முனை சாலை அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தின் பின்னால் வேகமாக வந்த லாரி அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பிரவீன்குமாரின் உடல் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீஹரி பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதும் அப்பகுதியில் இருந்த மக்கள் காயமடைந்தவர்களை மீட்க ஒன்று கூடினர். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விபத்து தொடர்பாக கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் நேருக்கு நேர் மோதிய ஆம்னி பேருந்துகள்!