தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது முன்னதாகக் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள்மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முறைக்கேட்டில் ஈடுப்பட்ட முருகேசன் மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்த அரசுப் பணியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தேர்விற்கு நிரந்தரப் பதிவு எண்ணில் விண்ணப்பித்தவர்கள் சரியான தகவல்களை அளிக்காமலும் இருந்துள்ளனர். இந்நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், அனைத்து தேர்வர்களும் அவர்களது ஆதார் எண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்களது நிரந்தரப் பதிவு எண்ணுடன் தங்கள் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். ஆதார் சட்டம் 2016இன் படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்பட மாட்டாது.
மேலும் ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தரப் பதிவில் இணைப்பதற்கான வழிமுறைகள், அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி குறித்த விவரங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இது குறித்து கருத்துக்களை அழிக்கவும் இணையதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவு எண் வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அமெரிக்க ஊடகங்களின் செயல் ‘இந்திய ஊடகங்ளுக்கான பாடம்’ - சசி தரூர்