ETV Bharat / state

சாலை விபத்தில் பலியான காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்; மகன் அளித்த புகாரால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 10:51 PM IST

Congress party district leader killed case: காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சாலை விபத்தில் பலியான வழக்கில், வாகனம் ஓட்டி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சாலை விபத்தில் பலியான வழக்கில் மூவர் கைது
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சாலை விபத்தில் பலியான வழக்கில் மூவர் கைது

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சாலை விபத்தில் பலியான வழக்கில் மூவர் கைது

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அளவூர் நாகராஜன் (55). இவர் காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவராகவும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார். இவர், நேற்று (செப்.25) சென்னையில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிய போது, தாம்பரம் அடுத்த செம்பாக்கம் அருகே சாலையோர தள்ளுவண்டிக் கடையில் உடன் இருந்தவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது மதுபோதையில் சரக்கு வாகனத்தை இயக்கி வந்த நபர்கள் நாகராஜன் மீது மோதி அருகில் நின்று கொண்டிருந்த அமரர் ஊர்தி வரை இழுத்துச் சென்றனர். பின்னர் வாகனத்தை இயக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் நாகராஜனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாகராஜன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சாலை விபத்தில் பலியான வழக்கில் மூவர் கைது

அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சென்ற பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன பதிவு எண்ணைக் கொண்டு தாம்பரத்தைச் சேர்ந்த வாகனத்தின் உரிமையாளர் கிஷோர் பீட்டர்ஸை (42) பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் கொடுத்த தகவலின் மூலம் வாகன ஓட்டுநர் உதயசீலன் (23), வாகனத்தில் உடன் இருந்த நிவேதன் (19) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் இவர்கள் மூவருக்கும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், மதுபோதையில் வாகனத்தை இயக்கியதும் தெரியவந்தது. மேலும், வாகனத்தின் உரிமையாளர் கடந்த 6 மாத காலமாக ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் அவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூவர் மீதும் அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, மரணம் விளைவித்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தூண்டுதலாகச் செயல்பட்டதாக உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே இது கொலையாக இருக்கும் எனவும், போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவரின் மகன் கவுதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது தந்தைக்கு நடந்தது விபத்து போல் தெரியவில்லை என்றும், இருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் உயிரிழந்த நாகராஜின் மகன் அளித்துள்ள புகாரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அடுத்த ஆறு மாதங்களுக்கான திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.