ETV Bharat / state

பண மோசடி செய்த பைனான்சியரை தாக்கிய கும்பல்

author img

By

Published : Oct 10, 2021, 8:41 AM IST

பண மோசடி செய்த பைனான்ஸியரை தாக்கிய கும்பல்
பண மோசடி செய்த பைனான்ஸியரை தாக்கிய கும்பல்

சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதால், அவரது உறவினரை கடத்திச் சென்று தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: புதுப்பேட்டை வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (43). இவர் ராஜ் சிட் பண்ட் மற்றும் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் தனது பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

சீட்டு முதிர்வடைந்த பின்னும் முதலீட்டாளர்களுக்கு கிறிஸ்துராஜ் பணம் தராமல் ஏமாற்றி வந்தது தொடர்பாக சுமார் 17 பேர் கடந்த 6ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின் பணத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் கொண்ட கும்பல் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்துராஜின் உறவினர் சஜின் என்பவர் நடத்தி வரும் தனியார் உணவகத்திற்குச் சென்று, கிறிஸ்துராஜிடம் பேச வேண்டுமெனக் கூறி அவரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.

அவரை அழைத்து வர மறுப்பு தெரிவித்ததால் சஜீனை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவகத்தின் ஊழியரான சையூல் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அளித்தார்.

அதனடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர், சஜினின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணையில் இறங்கினர். காவல்துறையினரின் விசாரணையில் சஜினின் செல்போன் சிக்னல் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தின் மேல்தளத்தில் காட்டிய நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் சஜீனை 4 பேர் கொண்ட கும்பல் அங்கு கட்டி வைத்து தாக்குவதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து சஜீனை மீட்ட காவல்துறையினர் அவரைக் கடத்திச் சென்று தாக்கிய புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹக்கீம் (35), ராஜ் (42), ராஜா ஹுசைன் (53) மற்றும் கொளத்தூரைச் சேர்ந்த முகமது சுல்தான் (58) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிறிஸ்துராஜ் தங்கள் பணத்தை மோசடி செய்ததால் அவரது உறவினரை கடத்தியதாகவும், கிறிஸ்துராஜ் இருக்கும் இடத்தை கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் திருவல்லிக்கேணி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிறிஸ்துராஜ் மீதான பண மோசடிப் புகாரும் காவல்துறையினர் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தல் தேதியை திரும்பப்பெற வலியுறுத்தி துணை நிலை ஆளுநரிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.