ETV Bharat / bharat

தேர்தல் தேதியை திரும்பப்பெற வலியுறுத்தி துணை நிலை ஆளுநரிடம் மனு

author img

By

Published : Oct 9, 2021, 6:39 PM IST

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் தேதியை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடன் மனு அளித்தனர்.

துணை நிலை ஆளுநரிடம் மனு
துணை நிலை ஆளுநரிடம் மனு

புதுச்சேரியில் நவம்பர் 2, 7, 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்கு எண்ணிக்கை நவம்பர் 17ஆம் தேதி நடக்கும் எனவும் அறிவிப்பு வெளியானது. இதற்குப் புதுச்சேரி அரசியல் கட்சியினர், வார்டுகள் ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் குளறுபடிகளைப் பற்றி பேசி கலைந்துரையாடல் நடத்திட இன்று (அக்.09) சட்டப்பேரவைச் செயலக வளாகத்தில் நான்காவது தளத்திலுள்ள கலந்தாய்வு அரங்கத்தில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சட்டவிரோதமானது

இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், துணை சபாநாயகர், 23 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் விரிவாக கலந்துரையாடினர். இக்கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அவை, “புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமலும், சுழற்சி முறை மாற்றம் அளிக்காமலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை புறக்கணித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது சட்ட விரோதம்.

தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்ய கோரிக்கை

சமூக நீதிக்கு எதிரான மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மழைக்காலம், புதுச்சேரி விடுதலை நாள், கல்லறைத் திருநாள், தீபாவளி திருநாள் போன்ற திருவிழாக் காலங்களின் இடையே தேர்தலை நடத்துவது நடைமுறைக்கு விரோதமானது.

ஆலோசணைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், இதிலுள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தல் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டி துணை நிலை ஆளுநர் அவர்களிடம் நேரில் சென்று முறையிட வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜனிடம் மனு

தன்னிச்கையாகவும் சட்ட விரோதமாகவும் முடிவுகளை எடுக்கும் சட்ட மாநிலத் தேர்தல் ஆணையர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை சென்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை அனைவரும் புறக்கணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், இதிலுள்ள குளறுபடிகளை நீக்கி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டி வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.