ETV Bharat / state

சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்!

author img

By

Published : Dec 1, 2022, 7:22 PM IST

வரி பாக்கியில் 20% தொகையை செலுத்துமாறு கடிதம் அனுப்பியும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செலுத்தாததை அடுத்து, அவரின் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் படி, கடந்த 2011-12 ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரையிலான காலத்தில் 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளதை அடுத்து, புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்கள், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

விஜயபாஸ்கர் உயர் நீதிமபன்றத்தில் மனுத் தாக்கல்:

இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "வருமான வரித்துறை முடக்கிய வங்கி கணக்குகளில் எம்.எல்.ஏ.வுக்கான சம்பளம் மற்றும் அரசு நிதிகளையும் பெறுவதாகவும். அந்த கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால், தன்னால் தொகுதிக்கு செய்ய வேண்டிய செலவுகளை செய்ய முடியவில்லை"
என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறையின் வரி வசூல் அதிகாரி குமார் தீபக் ராஜ் என்பவரின் பதில் மனுவை அத்துறையின் வழக்கறிஞர் ஏ.பி.சீனிவாஸ் தாக்கல் செய்தார்.

ரூ.8.5 லட்சம் அரசு நிதி:

அதில், 2011-12ஆம் ஆண்டிலிருந்து 2018-19ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும் படி உத்தரவு பிறப்பித்த போதும், வரி செலுத்தாததால் சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும், முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில் 2022-23ஆம் நிதியாண்டில் அரசு சார்பில், 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணத்தை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து சி.விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் சி.விஜயபாஸ்கர் செலுத்தாததால் சொத்துக்கள், வங்கி கணக்கள் முடக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி:

வரி வசூலிக்க எந்த தடையும் இல்லை எனவும், சி.விஜயபாஸ்கருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் நடந்ததாகவும், சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சிப்பதாகவும், வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட அவசியமில்லை என்பதால், விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வருமான வரித்துறையின் பதில் மனுவுக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: குஜராத் சட்டமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவில் 57% வாக்குகள் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.