ETV Bharat / state

லலிதா ஜூவல்லரி கொள்ளை: 50 சவரன் தங்க கட்டிகளாக பறிமுதல்!

author img

By

Published : Feb 1, 2021, 7:06 PM IST

லலிதா
லலிதா

சென்னை: லலிதா ஜூவல்லரியில் திருடு போன 5 கிலோ தங்கத்தில், 50 சவரன் தங்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அக்டோபர் இரண்டாம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், கடையின் ஊழியர் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவீன்குமார் சிங் 5 கிலோ தங்கத்தை திருடிச்சென்று தப்பியோடியது தெரியவந்தது. தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் முகாமிட்டு பிரவீன் குமார் சிங்கை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரவீன் குமார் சிங் திருடிய தங்க நகைகளில் 50 சவரனை, சவுகார்பேட்டையில் உள்ள நகைப்பட்டறையில் பணிபுரியும் அவரது நண்பர்கள் 4 பேரிடம் கொடுத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தேனாம்பேட்டை காவல் துறையினர் சவுகார்பேட்டையில் உள்ள நகைப்பட்டறைக்கு சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அதில், 50 சவரன் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வைத்திருப்பது தெரியவந்தது. நகையை பறிமுதல் செய்த காவல் துறையினர், 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரவீன் குமார் சிங்கின் உறவினர்களின் பட்டியலை எடுத்து ஒவ்வொருத்தராக தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.