சென்னை: பூம்புகார் பாரம்பரிய மீனவர் நலச் சங்கத்தின் செயலாளர் ஜம்புலிங்கம் கபடிக்குஞ்சு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், பாரம்பரிய மீன்பிடி எல்லையில் கட்டு மரங்கள், விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்வோர் சுருக்குமடி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்டை மாநிலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனக் கூறியிருந்தார்.
இந்த மனு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஜனவரி 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அரசு பிளீடர் பி. முத்துக்குமார் ஆஜராகி, புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. 2000ஆம் ஆண்டில் உள்ள விதிகளைப் பின்பற்றியே புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
2000ஆம் ஆண்டு விதிகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. 2000ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராமல், அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய விதிகளை எதிர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சுருக்குமடி வலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம் - ஸ்டாலின் உத்தரவு