ETV Bharat / state

எண்ணூர் அமோனியம் கசிவிற்கு காரணம் என்ன? - தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 2:30 PM IST

Green Tribunal
பசுமை தீர்ப்பாயம்

National Green Tribunal: எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தின் அமோனியம் வாயுக்கசிவிற்கு காரணம் குளிரூட்டும் கருவி செயலிழந்ததே என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் 27 அன்று நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதனால் கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில், இந்த வழக்கு பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதன்படி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமோனியம் வாயுக்கசிவின் பாதிப்பு அதிகாலை 4 மணிக்கு உணரப்பட்டது. 20 நிமிடத்தில் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது. உடனடியாக அமோனியம் வாயு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

தொழில்துறை பாதுகாப்புச் சட்டம் 33(a) படி, நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. நிறுவனத்திடம் விபத்துக்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தொழில்துறை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவு வரை குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

கோரமண்டல் நிறுவனத்தில் சுமார் 12,500 டன் அமோனியாவை திரவமாக சேமித்து வைக்கும் கொள்கலன் வசதி உள்ளது. கப்பலிலிருந்து கொண்டு வரப்படும் அமோனியாவை நிறுவனத்துக்கு எடுத்துச் செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழாயில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே கசிவு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி சரியாகச் செயல்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாயுக்கசிவால் சுமார் 60 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதில், 5 பேர் ஐசியூவில் வைக்கப்பட்டனர். வாயுக்கசிவு கடலிலிருந்து 2 அடி தூரத்தில் நடந்துள்ளது. உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, காற்றின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. பாதிப்புகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. அதன் கட்டமைப்புகள் குறித்து கடல்சார் வாரியம் கண்காணித்து வருகிறது.

நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கப்பலில் அமோனியம் கொண்டு வரப்படும்போது உரிய ஆய்வு செய்யப்படும். பின்னர் குழாய் மூலமாக கொள்கலனுக்கு கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்படுகிறது. அதன் அறிக்கைகளைத் தாக்கல் செய்கிறோம். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ற நிறுவனங்களை மூட வேண்டும். அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதிப்பு உணரப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு இது போன்ற சம்பவம் நடைபெற்றது.

மக்கள் 120 பேர் வரை மூச்சுத்திணறலால் அப்போது பாதிக்கப்பட்டனர். பாதிப்புகள் ஏற்படும்போது தற்காலிகமாக மூடுவதை அதிகாரிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 8 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நீதி வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், “சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவே நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏன் விபத்து நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை? மாசுக்கட்டு வாரியம் ஏன் தொடர்ந்து கண்காணிக்கவில்லை ? அவ்வப்போது நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்பட்டதா? ஏன் அதை செய்யவில்லை?

அந்த பகுதி மக்களுக்கு வாயுக்கசிவின் விளைவு தெரியுமா? மக்கள் கடல் பகுதியிலிருந்தார்களா? அல்லது வீடுகளிலிருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதா? எனவும், 5 மடங்கு அதிகமாகச் சேர்த்து வைத்ததே காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சுமத்துகிறது. அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

விபத்துகள் நடைபெறுவது இயற்கை, விபத்து நடைபெற்றது என்பதற்காக நிறுவனத்தை மூடிவிட முடியாது. ஆனால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொழில்துறை பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியது கட்டாயம்.

40 ஆண்டுகள் பைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அமோனியம் கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்து கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.2000 நோட்டுகளை மீண்டும் பயன்படுத்தலாம்..! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.