ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கல்தா? தமிழக பாஜகவின் பலே திட்டம்!

author img

By

Published : Dec 14, 2022, 12:03 PM IST

Updated : Dec 14, 2022, 12:32 PM IST

நாடாளுமன்ற தேர்தல் வியூகம்: தனித்து போட்டியிடுகிறதா பாஜக? - சிறப்பு பார்வை!
நாடாளுமன்ற தேர்தல் வியூகம்: தனித்து போட்டியிடுகிறதா பாஜக? - சிறப்பு பார்வை!

தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாஜக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது. அதில் கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் பாஜக நுழைந்தது.

தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத்தலைமை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற இருக்கிறது என்ற நிலை மாறி, தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி பேச்சுவார்த்தை: பாஜக தலைவர் அண்ணாமலை, "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் வெற்றி அடைவோம்" என கூறி கொண்டே வரும் நிகழ்வு, பாஜக தனித்து போட்டியிட தயார் நிலையில் உள்ளது என்ற தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்த பின்னர் அண்ணாமலையின் நடவடிக்கையில் அதிகளவு மாற்றங்கள் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக டெல்லி சென்று திரும்பிய அண்ணாமலை, மாவட்ட தலைவர்களை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் தமிழ்நாடு அரசியல் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் 6 இடங்களுக்கு மேல் நம்மால் பெற முடியாது.

அப்படி பெற்றாலும் அதில் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடியும். ஆனால் தனித்து போட்டியிடும் பட்சத்தில் கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம்" என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து தனித்து போட்டியிடுவதற்காக வேலைகளை அண்ணாமலை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஓபிஎஸ் வாழ்க, இபிஎஸ் வாழ்க என கூற முடியாது: கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக சார்பில் சிந்தனையாளர் பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, "2024 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், 'ஓபிஎஸ் வாழ்க, இபிஎஸ் வாழ்க' என்ற கோஷத்தை நாம் எழுப்ப முடியாது.

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருவரும் இப்படி பிரிந்திருந்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை இல்லாமல், ஏதோ ஒரு அணியுடன் கூட்டணி வைத்தால் மக்கள் நம்மை ஏற்க மாட்டார்கள்.

தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்கு பெற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களை கைப்பற்றி விடலாம்" என கூறினார். இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான வேலைகளில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் அதிமுக பிரிந்திருக்கிறது.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பல்வேறு வழிகளில் இபிஎஸ்ஸுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் அதை இபிஎஸ் ஏற்கவில்லை. கடந்த காலங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாக பாஜக தரப்பினர் நினைக்கின்றனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு 2024 தேர்தலை விட 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து முதலமைச்சர் வேட்பாளராக, தான் வர வேண்டும் என்ற எண்ணம்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இது போன்று பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்து பாஜக தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

5 இடங்கள் போதாது? இது குறித்து நம்மிடையே பேசிய மூத்த பத்திரிகையாளர் ஜி.பாபு ஜெயக்குமார், "2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன். தற்போது அண்ணாமலை தைரியமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்தால் பாஜகவிற்கு குறைவான இடமே கிடைக்கும்.

ஆனால் பாஜகவிற்கு 10 இடங்களுக்கு மேல் தேவைப்படுகிறது. இதில் பாஜக வலுவாக இருப்பதாக நினைக்கும் பொள்ளாச்சி, கோவை போன்ற தொகுதிகளை அதிமுக ஒதுக்கீடு செய்யுமா என்பதும் கேள்விதான். பாஜகவை வளர்ப்பதற்கு 5 இடங்கள் போதாது என அண்ணாமலை நினைக்கிறார்.

பாஜக தனித்து நின்று 10 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியிடம் இருந்து அதிக இடங்கள் கேட்டு பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை அதிக வாக்கு சதவீதம் பெற்றால் 2026ஆம் ஆண்டில் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கான முயற்சியில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு டெல்லி பாஜக மேலிடமும் அண்ணாமலைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்" என கூறினார்.

ஜெயக்குமார் திட்டவட்டம்: இது குறித்து பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, இது போன்று ‘25 இடங்களை வெற்றி பெறுவோம்' என கூறுவது இயல்பு. இன்னும் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும். பாஜக தனித்து போட்டியிட நினைத்தால், அது அவர்களின் விருப்பம்" என கூறினார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், தேசிய கட்சிகள் எப்போதும் மாநில கட்சிகளுடன் இணைந்துதான் தேர்தலை சந்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவின் மூன்றாம் தலைமுறை வாரிசாகிறாரா உதயநிதி? - ஓர் அலசல்!

Last Updated :Dec 14, 2022, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.