ETV Bharat / state

பொறியியல் படிப்பு மறுதேர்வுக்கு மே 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு!

author img

By

Published : May 21, 2021, 9:35 PM IST

பொறியியல் படிப்பு மறு தேர்வுக்கு மே 24ஆம் தேதி விண்ணப்பிக்க அறிவிப்பு!
பொறியியல் படிப்பு மறு தேர்வுக்கு மே 24ஆம் தேதி விண்ணப்பிக்க அறிவிப்பு!

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தேர்விற்கு மாற்றாக நடத்தும் மறுதேர்விற்கு மாணவர்கள் வரும் மே 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாத பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த தேர்வினை 4 லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களில் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியானது. பல்வேறு குளறுபடிகள் காரணமாக ஏராளமான மாணவர்களுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை எனப் புகார் எழுந்தது.

இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன. மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மற்ற பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது போல மூன்று மணி நேரத்திற்கு ஆன்லைன் வழியில் பொறியியல் மாணவர்களுக்கும் குழப்பங்களின்றி மீண்டும் தேர்வு நடத்தப்படும்.

இதற்காக மாணவர்கள் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்ச்சி மதிப்பெண் பெற்ற மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வினை எழுதிக்கொள்ளலாம். மேலும் இந்தத் தேர்வினை எழுதுவதற்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களும் கட்டணம் செலுத்தி எழுதிக் கொள்ளலாம்' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வினை இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தியது. அந்தத் தேர்விற்குப் பதில் நடைபெறும் மறு தேர்வுக்கு வரும் 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.