ETV Bharat / state

அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 81,107 மாணவர்கள் சேர்க்கை!

author img

By

Published : Jun 24, 2023, 6:58 AM IST

Etv Bharat
கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 22,407 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில், கடந்த மே 8ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்டது.

மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக, முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1,07,299 இடங்களில் சேர்வதற்கு 2,46,295 விண்ணப்பங்க்ள பெறப்பட்டன. அவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

அந்த கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40,287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் முறையாக அரசுக் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்த பின்னர், வேறு கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரிக் கல்வி இயக்குனரின் இணையதளத்தில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்ற பின்னர்தான் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்த கலந்தாய்வின் மூலம் 40,287 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 15,034 மாணவர்களும், 25,253 மாணவிகள் உள்ளனர். மேலும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75,811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31,621 மற்றும் மாணவிகள் 44,190 பேரும் சேர்ந்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்கள் சேராமல் காலியாக உள்ள இடங்களுக்கு, கல்லூரியின் தரவரிசை அடிப்படையில், இனவாரி ஒதுக்கீட்டின்படி மாணவர்கள் அழைக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 23ஆம் தேதி வரை 81,107 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களில் 34,474 மாணவர்களும், 46,633 மாணவிகளும் ஆவார்கள். அரசுப் பள்ளிகளில் படித்த 22,407 மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
ஜூன் 30ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும், ஜூலை 3ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் படித்த 22,407 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: உயர்கல்வியில் எந்தப் பாடத்தை நடத்துவது? சிக்கித் தவிக்கும் துணைவேந்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.