ETV Bharat / state

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து வழக்கு அக்.19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 7:07 PM IST

Etv Bharat
Etv Bharat

Minister Ponmudy disproportionate assets case: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சென்னை: கடந்த 1996-2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்களை லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்தார். இந்த நிலையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி நடைமுறைப்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.9) விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு - இயற்கை விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.