ETV Bharat / state

நீட் விலக்கு சட்டத்தின் நிலை குறித்து மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் - ராமதாஸ்

author img

By

Published : Dec 20, 2021, 9:08 PM IST

நீட் விலக்கு சட்டத்தின் நிலை குறித்து மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாளை 21ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைகின்றன.

ஆனால், நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கிடைப்பதற்கான அறிகுறிகள்கூட தென்படவில்லை. இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்காது.

தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பாரதிய ஜனதா தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தச் சட்ட முன்வரைவை ஆதரித்து வாக்களித்தன. சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டதைத் தவிர்த்து, இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 100 நாள்கள் நிறைவடையவுள்ளன. ஒரு சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கான கால அவகாசத்தைவிட இது பல மடங்கு அதிகம் ஆகும்.

நுழைவுத் தேர்வுகளிலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்டத்தை இயற்றிய அனுபவம் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் படிப்புக்கு முதன்முதலில் 1984ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு அறிமுகம்செய்யப்பட்டது.

அதை ரத்துசெய்வதற்கான சட்டம் 2006 டிசம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு ஆளுநர், ஒன்றிய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, 2007 மார்ச் 3ஆம் நாள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நடைமுறைகள் அனைத்தும் மொத்தமாக 86 நாள்களில் நிறைவடைந்துவிட்டன. இதுதான் சரியான கால அவகாசமாகும்.

ஆனால், இப்போது நீட் விலக்கு சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு நாளையுடன் 100 நாள்களாகும் நிலையில், அதற்கு ஆளுநரின் ஒப்புதல்கூட கிடைக்கவில்லை. இத்தாமதம் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நிறைவேற்றப்பட்டிருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதை உறுதிசெய்ய ஓரிரு நாள்கள் போதுமானது. ஒருவேளை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுநருக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறலாம். இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால்கூட ஓரிரு வாரங்களில் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட முடியும். ஆனால், 100 நாள்களாகியும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு அரசியலைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் நேரில் சந்தித்துக் கோரிக்கைவிடுத்தார். ஆனால், அதற்கு எந்தப் பயனும் இல்லை. அதன்பின் நவம்பர் 27ஆம் தேதி முதலமைச்சர் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனும் கடந்த 17ஆம் தேதி இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. ஆளுநர் இனியும் தாமதம் செய்யாமல் நீட் விலக்கு சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

நீட் விலக்கு சட்டம்

அதே நேரத்தில் ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை மட்டுமே காரணம் காட்டி, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் கடமையிலிருந்து அரசு விலகிவிடக் கூடாது. நீட் விலக்குச் சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது எளிதானது அல்ல என்பது அனைவரும் அறிந்ததுதான்.

முந்தைய அதிமுக ஆட்சியில் இது குறித்து நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களை மத்திய அரசு ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியது. அதை நன்றாக அறிந்துதான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெறுவதாக வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படக் கூடும். அதற்கு முன்பாக அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் உண்டா... இல்லையா? என்பதை அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும். ஆளுநரைக் காரணம் காட்டி, நீட் விலக்கை அரசும் காலவரையறையின்றி தாமதப்படுத்திக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீட் விலக்கு சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதற்கு ஆளுநரில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெற அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது, எவ்வளவு காலத்திற்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும்? வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டா இல்லையா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

நீட்டுக்கு விலக்கு பெறும் விஷயத்தில் அரசுக்கு அனைத்து வழிகளிலும் ஒப்புதல் அளிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெறவும், தமிழ்நாட்டு மாணவர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 17 கோடி ரூபாய் முறைகேடு..52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.