ETV Bharat / state

நெல்லை தீபக் ராஜா உடல் ஒப்படைப்பு; பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீஸ்! - nellai deepak raja murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 11:59 AM IST

deepak raja case: நெல்லையில் 20ம் தேதி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் எதிரொலியால் மாநகர் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்கு போடப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், தீபக் ராஜா(கோப்புப்படம்)
பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், தீபக் ராஜா(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை அருகே கடந்த 20ம் தேதி தீபக் ராஜா என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 6 தனிப்படை அமைக்கப்பட்டு பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டு கொலை வழக்கோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட தீபக் ராஜா உடல் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆனால் இந்த 4 பேர் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றும், நேரடியாக தீபக் ராஜாவை வெட்டிக் கொலை செய்த உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என 7 நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் திருச்சி பகுதியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த கூலிப்படை தலைவன் நவீன், லெஃப்ட் முருகன், லட்சுமி காந்த், சரவணன் ஆகிய நான்கு பேரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.

இதில் நவீன், லெஃப்ட் முருகன் ஆகிய இருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நெல்லைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வடிவேல் முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, பழிக்கு பழியாக தீபக் ராஜாவை அவர்கள் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், தீபக் ராஜாவை கொல்ல வடிவேல் முருகன் தரப்பினர், கூலிப்படையை சேர்ந்த நவீன் என்பவரை அணுகி இக்கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கூறினர். தற்போது இக்கொலை வழக்கில் முக்கிய கொலையாகிகள் கைதாகியிருப்பதால் தீபக் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. உடல் எடுத்துச் செல்லப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காவல் துணை ஆணையர்கள் தலைமையில் முக்கியமான பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தின் முக்கியமான கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாகைக்குளம் பகுதியில் முக்கியமான தலைவர்களின் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து தீபக் ராஜாவின் உடல் வஜ்ரா வாகனத்தோடு போலீஸ் படை சூல சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது தீபக் ராஜாவின் ஆதரவாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

இதையும் படிங்க: தோழியின் சதி.. தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.