ETV Bharat / state

மேகதாது அணைக்கு அனுமதி தொடர்பாக கர்நாடக முதலமைச்சரின் பேச்சு ஆபத்தானது- ராமதாஸ் அறிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 3:55 PM IST

ramdoss statement
ராமதாஸ் அறிக்கை

mekedatu dam: மேகதாது அணை குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது எதிர்ப்பை தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் உள்ளதால், அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது; மத்திய அரசு மறுகேள்வி கேட்காமல் அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். அரசு நிர்வாகத்தின் அடிப்படை தெரியாமல் சித்தராமையா தெரிவித்துள்ள இந்தக் கருத்து கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(செப்-12)அறிக்கை மூலம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், "கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லையில் தான் உள்ளது. அதை தமிழ்நாடு எதிர்க்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், தமிழ்நாடு தேவையில்லாமல் தொல்லை கொடுக்கிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகும் கூட, அதற்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய முன்வரவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பலமுறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், பதவி வகித்தவரும், இரண்டாவது முறை முதலமைச்சராக பதவி வகிப்பவருமான சித்தராமையா, இந்திய அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம், இரு மாநில நீர்ப்பகிர்வு உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படை கூட தெரியாமல் தமிழ்நாட்டிற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பது தவறு; இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், அதுபற்றி தமிழ்நாடு கேள்வி எழுப்பக் கூடாது என்பது அறியாமையின் உச்சம் ஆகும். தமிழ்நாடும், கர்நாடகமும் இந்தியா என்ற நாட்டின் இரு மாநிலங்கள் தானே தவிர, இரு தனித்தனி நாடுகள் அல்ல. எனவே, கர்நாடகம் அதன் விருப்பம் போல செயல்பட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட முடியும்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பாயும் ஆறுகளில் கூட முதல்மடை பாசனப்பகுதிகளில், நாட்டின் விருப்பம் போல அணைக் கட்டிக்கொள்ள முடியாது. அதற்கான பன்னாட்டு ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகம், காவிரி நீர் சிக்கலில் கடைமடை பாசனப்பகுதியான தமிழகத்தின் உரிமைகளை புறக்கணித்து விட்டு செயல்படமுடியாது.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றால், மேகதாது அணையை கட்டுவது தான் ஒரே வழி என்று சித்தராமையா கூறுவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் இப்போது கட்டப்பட்டுள்ள அணைகளின் கொள்ளளவு 115 டி.எம்.சி ஆகும். அந்த அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு, வெளியேற்றப்படும் உபரி நீர் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

70 டி.எம்.சி கொள்ளளவு கொண்டு மேகதாது அணை கட்டப்பட்டால், அந்த நீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் போய்விடும். எனவே, மேகதாது அணை கட்டுவது தமிழகத்திற்கு பெரும் தீங்காகத் தான் அமையுமே தவிர, ஒரு போதும் தீர்வாக அமையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசி வரும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டிற்கு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது" - ராமதாஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.