சென்னை: உருமாறிய கரோனா வைரஸ் ஒமைக்ரான் அதிகம் பாதித்த ஹை-ரிஸ்க் நாடுகளான தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் உள்பட 12 நாடுகளிலிருந்து வரும், பன்னாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்தில் கரோனா தொற்று கண்டறியப்படும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலையத்தில் காத்திருந்து நெகட்டிவ் என வந்தால், தங்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். வீடுகளில் ஏழு நாள்கள் தனிமையில் இருந்து, எட்டாவது நாள் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் டிசம்பா் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஹை-ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஹை-ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகள், ஹை-ரிஸ்க் நாடுகளுக்குச் சென்றுவந்த பயணிகள் Air suvidha இணையதளம் மூலம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு முன்பதிவு செய்து சுய ஒப்புதல் அளிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
6 விமான நிலையங்களில் இன்றுமுதல் நடைமுறை
பயணம் தொடங்குவதற்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும். இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது, பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக 14 நாள்களில் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றுவந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
முதற்கட்டமாக இந்தக் கட்டாய முன்பதிவு நடைமுறை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய ஆறு பன்னாட்டு விமான நிலையங்களில் இன்றுமுதல் (டிசம்பர் 20) நடைமுறைக்கு வந்துள்ளது.
பயணிகள் காத்திருக்கத் தேவையில்லை
இந்தப் புதிய கட்டுப்பாட்டால் எந்தெந்த விமானங்களில் ஹை-ரிஸ்க் நாடுகளிலிருந்து எத்தனை பயணிகள் வருகின்றனர், அவா்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டு வருகின்றனர் என்ற முழுவிவரம் பன்னாட்டு விமான நிலையங்களில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு முன்னதாகவே தெரிந்துவிடும். இதையடுத்து அவர்கள் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய தயார்நிலையில் இருப்பர்.
அத்தோடு பயணிகள் பரிசோதனைக்கான கட்டணத்தையும் இணையதளம் மூலமாகவே செலுத்திவிடுவதால் விமான நிலையத்தில் பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. விரைவில் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு பயணிகள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர் எனச் சென்னை விமான நிலைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனா்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சரின் ஆடிட்டர் அலுவலகத்திலும் சோதனை