ETV Bharat / state

"தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" - அமைச்சர் சி.வி. கணேசன்!

author img

By

Published : Mar 6, 2023, 4:27 PM IST

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு

வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் சி.வி. கணேசன் விளக்கம்

திருச்சி: தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ) மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், இஎஸ்ஐ மருத்துவத்துறையின் இயக்குநர் ராஜமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி இன்று திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை சுகாதாரத்தோடு உள்ளது, தேவையான அளவுக்கு மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவப் பிரிவு மிக சிறப்பாக செயல்படுவதோடு, தினமும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் மகப்பேறு மருத்துவப் பிரிவும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த மருத்துவமனையில் மாலை நேரங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக உள்ளதால், இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்துத் தர வேண்டும் என்று, இங்கு சிகிச்சைப் பெற்று வந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும்.

அதேபோல் தீவிர சிகிச்சைப் பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏறக்குறைய 6 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஆய்வுக்குழு, சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். அங்குள்ள தொழிலாளர்கள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் வெளியான நிலையில், வட மாநில ஊழியர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து அழைப்புகள் வந்தன" - சிராக் பாஸ்வான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.