ETV Bharat / state

செயிண்ட் கோபைன் நிறுவனம் சுமார் 3400 கோடி முதலீடு; 1,150 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 5:55 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாட்டுடன் சுமார் 25 ஆண்டுகள் உறவு உள்ள செயிண்ட் கோபைன் நிறுவனம் மூலம் சுமார் 3400 கோடி ரூபாய் முதலீட்டில் 1,150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: பிரான்ஸ் நாட்டின் செயிண்ட் கோபைன் (Saint-Gobain) நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர்கள் குழுவினரை சென்னை, கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார். அப்போது உரையாற்றும்போது, 'I welcome all the Directors of Saint Gobain's Global Board to the beautiful city of Chennai. தமிழ்நாட்டிற்கும் செயிண்ட் கோபைன் நிறுவனத்திற்குமான உறவு ஏறத்தாழ 25 ஆண்டு வரலாறு கொண்டது.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம், திருப்பெரும்புதூரில் இந்நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டில், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், செயிண்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, இதுகாறும் ஏறத்தாழ 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது' என்று பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாரத் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!

மேலும் பேசிய அவர், 'கடந்த ஆண்டு மார்ச் 9 அன்று, திருப்பெரும்புதூர் செயிண்ட் கோபைன் நிறுவனத்தில் மிதவைக் கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது செயிண்ட் கோபைன் நிறுவனம், ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தித் திட்டமும், திருப்பெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. இம்மாநிலத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டுச் சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே நான் கருதுகிறேன்' என்று கூறினார்.

'சுமார் 3400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றிப்பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்' என தெரிவித்தார். இக்கூட்டத்தில், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் பியரி ஆன்ட்ரி டி சேலண்டர் ( Pierre-Andre de Chalendar), தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின் ( Benoit Bazin) உள்ளிட்ட செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்; அரசு வழங்கிய பட்டா செல்லாது என கூறியதாக குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.