ETV Bharat / state

மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்பார்; அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்!

author img

By

Published : Jul 25, 2023, 3:36 PM IST

மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் அளித்து உள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இது குறித்து மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டு உள்ளார்.

அதில், ''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (25.7.2023) கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார். இருந்தபோதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஜூலை 20அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும் குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனைத் தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது.

மேலும் இம்மாநில மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்து உள்ளனர். அவர்களின் அழைப்பினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்'' என்று மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.