ETV Bharat / state

ஈஷா மைய நில ஆக்கிரமிப்பு வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு...

author img

By

Published : Dec 1, 2022, 10:15 PM IST

ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா மையம்

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா அறக்கட்டளை மீதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஒத்திவைத்தார்.

சென்னை: சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்கு ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு கோவை ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, உள்ளிட்ட நீதிபதிகள் அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா, இல்லையா, என்பதே சர்ச்சைக்குரிய கேள்வியாக இருப்பதாக தெரிவித்தார்.

2 லட்சம் சதுர மீட்டர் உள்ள ஈஷா மையத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் என்றும் மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக கருத முடியாது என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு 2014-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்றும் இடைக்கால தடையை நீக்கி நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடல், மனம், நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக கருத வேண்டும் என்றும், இதனை செய்யும் கல்வி நிறுவனமாக ஈஷா அமைப்பு உள்ளதாக தெரிவித்தார். எனவே சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என்றும் அரசின் நோட்டீஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்வி நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு பெற முடியும் என்றும் அதனடிப்படையில் ஈஷா மையம் விலக்கு பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.