ETV Bharat / state

கோடநாடு வழக்கில் எடப்பாடியை தொடர்ப்புபடுத்தி பேச உதயநிதிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 3:48 PM IST

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

Kodanad Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களில் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுத் தாடியின் பின்னால் நீண்ட நாள் பதுங்கியிருக்க முடியாது என்றும், அந்த ஆடே காணாமல் போகும்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், உதயநிதி பேசியிருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மான நஷ்ட ஈடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், 1 கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட
ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கைகள் விடுவது வழக்கம் என்றாலும், இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களில் இருந்து உதயநிதி அறிக்கை அவதூறாக உள்ளதாகவும், இதை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், மேற்கொண்டு இதுபோல அறிக்கைகள் வெளியிட கூடாது என உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனக் கூறி, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (அக்.06) மீண்டும் விசாரணைக்கை வந்தபோது, அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வரும் நவம்பர் 02ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ: 10 சதவீத சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.