பத்தாண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு விவகாரத்திலும் மிகப் பக்குவமாக காய்களை நகர்த்திவருகிறது.
அதில் ஒரு பகுதிதான் திமுக எங்கெல்லாம் (முக்கியமாக கொங்கு மண்டலம்) பலவீனமாக உள்ளதோ அங்கு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அப்பகுதியின் வாக்கு வங்கி அதிகமுள்ள சமூகம் சார்ந்த நபர்கள், மாற்றுக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, மாற்றுக் கட்சிகளிலிருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இணைந்துவருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அதிகமானோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
இச்சூழலில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
கொங்குதான் இப்போ டாப்
நாளை முதல்கட்டமாக அதிமுகவின் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள், கிளை நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் திமுகவில் இணைகிறார். கரோனா ஊரடங்கிற்குப் பின் பிரமாண்ட முறையில் விழா நடத்தி அதிக நபர்கள் திமுகவில் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
திமுக தொடர்ந்து கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை 'ஈர்த்து'வருவது அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் முடிவுகள்: கொங்கு மண்டலத்தின் கடந்த கால வரலாறு